அந்த 5 கோடி எங்கே.?.. கவர்னருக்கு அதிமுக கொடுத்தது ஏன்.?.. நிதி அமைச்சர் பகீர்.!

“அட்சயபாத்திரா” எனும் தொண்டு நிறுவனம் மூலம் மிகப் பெரிய தில்லாலங்கடி வேலை நடந்திருப்பதை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி பேசும்போது, ‘‘அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதன்முதலில் எடப்பாடி அரசுதான் கொண்டு வந்தது’’ என்று பேசினார்.

உடனே சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுந்து, ‘‘காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு இதற்கு முன்பு தொடங்கவில்லை. உறுப்பினர் கூறுவது அட்சய பாத்திரா எனும் தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் செய்த தொண்டு பணியை, தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார்.

காலை உணவு திட்டம் யார் கொண்டு வந்தது.?

பல்வேறு NGOகள் அரசிடம் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்த அனுமதி கோரும், அரசும் அதை அனுமதிக்கும். ஆனால் திட்டம் அதற்குப் பொறுப்பான தொண்டு நிறுவனத்திக்குதான் சொந்தம். நிதி ஆதாரமும் அவர்கள்தான் செய்வார்கள்’’ என விளக்கினார்.

ஆனால் அமைச்சர் சொன்னதை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் அதை குழப்பிக் கொண்டிருந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச அனுமதி கோரினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வழக்கமாக ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் அரசு கவர்னருக்கு discretionary fund எனும் வகையில் 50 லட்சம் நிதி ஒதுக்கும். எடப்பாடி முதலமைச்சராக இருந்த இறுதி ஆண்டில், அந்த 50 லட்சம் என்பதை பத்து மடங்கு உயர்த்தி 5 கோடியாக தருகிறார்.

அட்சய பாத்திரா அமைப்பின் பெயரில் தில்லாலங்கடி

அதே காலக்கட்டத்தில் அட்சய பாத்திரா தொண்டு நிறுவனம், தாங்கள் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்க விரும்புவதாகவும், அதற்கு அனுமதியும், உணவு சமைக்க இடமும் கேட்டது. அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மிக மையமான இடத்தில் அதற்கு இடம் தந்து பெரிய உணவுக்கூடமும் கட்டி தருகிறது.

அதிமுகவின் குட்டு வெளிப்பட்டது

உடனே கவர்னர் தனது நிதியில் இருந்து 2 கோடி வீதம் இரண்டு முறை என மொத்தம் நான்கு கோடி ரூபாயை அட்சய பாத்திரா நிறுவனத்துக்கு நன்கொடையாக தருகிறார். நம்ம வீட்டு தேங்காயையே எடுத்து அந்த நிறுவனம் அதன் பேரில் நம்ம வீட்டு பிள்ளைகளுக்கு உடைக்கிறது. அதுவும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவாக.

பொளந்து கட்டிய நிதி அமைச்சர்

அதுபோக அந்த 5 கோடி நிதியில் மீதமுள்ள பணம் எந்தக் கணக்குக்கு சென்றது என்பதை இதுவரையில் CAG தணிக்கையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இது முதன் முறையும் இல்லை, அடுத்தபடியாக மீண்டும் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியை அட்சய பாத்திராவிற்கு கவர்னர் கொடுக்கிறார், பின் அத்திட்டமே நின்று போகிறது’’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். அதைத் தொடர்ந்து அதிமுகவினர் அவையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.