கன்னியாகுமரி கடற்கரை முகப்பு மேம்பாட்டு பணி: தமிழக சுற்றுலா துறைக்கு மத்திய அரசு விருது

சென்னை: கன்னியாகுமரி கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்ததற்காக தமிழக சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா தலங்களில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘சுவதேஷ் தர்ஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, மாமல்லபுரம், ராமேசுவரம், திரிவேணி சங்கமம், குலசேகரப்பட்டினம், குமரி, தெற்குறிச்சி, மணக்குடி கடற்கரை பகுதி சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதற்காக ரூ.73.3 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த கடற்கரை சுற்றுலா தலங்களில் நிலச்சீரமைப்பு, மின்விளக்குகள் வசதி அமைத்தல், சுற்றுலா தகவல் மையம், பொது கழிப்பிடங்கள் உருவாக்குதல், கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாடு, மீட்புப் படகுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், குமரி கடற்கரையில் செயல்படுத்தப்பட்ட கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகள், அங்கு வரும் சுற்றுலா பணிகளை கவர்ந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பொது தனியார் துறை கூட்டாண்மை குறித்த தேசிய பயிலரங்கத்தில், கன்னியாகுமரி கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்ததற்காக தமிழக சுற்றுலாதுறைக்கு, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விருதினை வழங்கினார். இந்த விருதை தமிழக சுற்றுலாத் துறை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் பெற்றுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.