முதுமலை: தாயை பிரிந்து தவித்த 5 மாத ஆண் யானை குட்டி ஒன்று ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், யானை குட்டி தற்போது உயிரிழந்துள்ளது.
சமீப நாட்களாக தமிழ்நாட்டில் யானைகளின் உயிரிழப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு யானை கூட்டம் ஒன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுற்றி வந்தது. ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் கடந்த 6ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை மின் வேலியில் சிக்கி 3 யானைகளும், மின் கம்பம் உரசியதில் 1 யானையும் என 4 யானைகள் உயிரிழந்துள்ளன. எனவே இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இப்படி இருக்கையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் யானை கூட்டம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. இப்படி வந்த யானை கூட்டத்தின் குட்டி ஒன்று விவசாய கிணற்றில் விழுந்தது. இதனையடுத்து வனத்துறையினர் யானை குட்டியை மீட்டனர். பின்னர் இதனை அதன் கூட்டத்துடன் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக வனத்துறையினர் சில முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இப்படி மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே யானை குட்டியை என்ன செய்வதென்று தெரியாமல் வனத்துறையினர் விழித்துக்கொண்டிருந்தனர்.
சிக்கல்
பின்னர் குட்டியை ஒரு வார காலம் வனத்துறை ஊழியர் மகேந்திரன் பராமரித்து வந்தார். மேலும் தொடர்ந்து குட்டியை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அதனை முதுமலைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக பொம்மன்-பெள்ளி தம்பதியினர் தருமபுரிக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்களது அறிவுறுத்தலின் பெயரில் யானை குட்டி பத்திரமாக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கடந்த 16ம் தேதி வந்த சேர்ந்த யானை குட்டிக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதில் இவர்கள் எதிர்கொண்ட முதல் சிக்கல் காலநிலைதான். தருமபுரி ஒரு வெப்பமண்டல பகுதியாகும்.
பூஜை
யானைகள் இது போன்ற பகுதிகளை விரும்பும் என்றாலும் யானைகளால் ஓரளவு குளிர் உள்ள பகுதிகளிலும் உயிர்வாழ முடியும். இப்படி இருக்கையில் முதுமலைக்கு வந்த யானை குட்டி குளிரில் நடுங்கியது. ஏற்கெனவே கிணற்றில் விழுந்திருந்ததாலும், தற்போது முதுமலையில் வந்திருப்பதாலும் குளிரில் யானை குட்டி நடுங்கியது. ஆனால் அதற்கேற்பவாறு பொம்மன்-பெள்ளி தம்பதியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். பின்னர் யானை குட்டியை மருத்துவர்கள் பொம்மன்-பெள்ளி தம்பதியிடம் ஒப்படைத்தனர். குல தெய்வத்திற்கு பூஜை செய்து பொம்மன்-பெள்ளி தம்பதியினர் குட்டி யானையை பெற்றுக்கொண்டனர்.
உடல்நிலை
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க முடியாததால் இங்கு கொடுண் வரப்பட்டுள்ளது. தற்போது யானை குட்டி ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யானை குட்டி க்ரான் எனும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. உடல்நிலை ஓரளவு சீராக இருக்கிறது” என்று கூறினார். இதனையடுத்து இரண்டு வாரம் கழிந்த நிலையில் நேற்று மாலை குட்டி யானையின் உடல் நலத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வந்திருந்த யானை குட்டியின் உடல்நிலை ஒரேயடியாக திடீரென சரிய தொடங்கியது.
உயிரிழப்பு
யானை குட்டிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் செரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருந்து செரிக்காததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 1 மணி நேரத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது. ஏற்கெனவே தாங்கள் வளர்த்த ரகு-அம்மு யானைகள் வேறு ஒரு பாகன்களிடம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது புதியதாக வந்த ஆண் யானை குட்டியை பாரமரிக்க போவதை எண்ணி பொம்மன்-பெள்ளி தம்பதியினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத இந்த உயிரிழப்பு யார் கண்பட்டு நிகழ்ந்ததோ? என்று மற்ற பாகன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.