தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 27ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகளை கூண்டோடு கலைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி.முருகேசன் என்பவரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மாவட்ட தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டி.எம்.டி கதிரவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிதாக தரணி.முருகேசன் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்திருந்தார். இதனால் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
புதிதாக பதவியேற்றுள்ள ராமநாதபுர பாஜக மாவட்ட தலைவர் தரணி.முருகேசனுக்கு அவரது ஆதரவாளர்கள் நேரிலும் பேனர் வைத்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். முன்னாள் பாஜக மாவட்ட தலைவரின் ஆதரவாளர்கள் சிலர் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தேனீக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது