பாட்னா,
காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக,அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை மக்களவை செயலகம் அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. எனினும், கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. அதனை எதிர்கொள்ளவும் அவர் தயாராகி வருகிறார்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் சமீபத்தில் நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மோடி பெயர் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு ஒன்று தொடுத்து உள்ளார்.
இந்த வழக்கு பாட்னா நகரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பற்றிய வழக்கில் வருகிற 25-ந்தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி சுஷில் மோடியின் வழக்கறிஞர்கள் சஞ்சய் மற்றும் பிரியா குப்தா கூறும்போது, கோர்ட்டில் நேரில் அவர் இன்று ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் பேரணியில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனால், அவருக்கான ஜாமீனை ரத்து செய்யும்படி கோர்ட்டில் கேட்டு கொண்டுள்ளேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.