ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் சில காலமாகவே தொடர்ந்து பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் இந்திய பகுதிகள் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதற்கிடையே இன்றைய தினம் காஷ்மீரில் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மலைப்பகுதி இந்திய ராணுவ வாகனத்தில் இன்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தனர்.
தாக்குதல்: அவர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சென்றுகொண்டு இருந்தனர். அப்போது திடீரென வாகனம் தீப்பிடித்து எரிய அதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள மெந்தர் துணைப் பிரிவு பகுதியில் அமைந்து இருக்கும் பாடா துரியன் நீர்வீழ்ச்சிக்குப் பிற்பகல் 3.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. முதலில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றே கருதப்பட்டது.
மின்னல் தாக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றே கூறப்பட்டது. இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன் கர்னல் தேவேந்திர ஆனந்த்தும் முதலில் இதே தகவலைத்தான் கூறியிருந்தார். இதற்கிடையே இது எதிர்பாராமல் நடந்து விபத்து இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை இந்திய ராணுவமும் கூட உறுதி செய்துள்ளது.
சுற்றித் தாக்குதல்: இந்திய ராணுவத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகே உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் பணி மூட்டத்தைப் பயன்படுத்தி ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மூன்று பக்கங்களில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதைத் தொடர்ந்தே கையேறி குண்டு தாக்குதல் நடந்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது: அந்த கையெறி குண்டு எரிபொருள் தொட்டியில் விழுந்ததில் தான் வாகனம் தீப்பிடித்துள்ளது. இதில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021இல் பல வாரங்கள் நீட்டித்த என்கவுன்டர் சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகே தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசிடமும் ராணுவ அதிகாரிகள் விளக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.