தலாய்லாமாவுக்கு மகசேசே விருது – 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் வழங்கப்பட்டது

தர்மசாலா,

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது. இவர் அப்போது திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து இருந்தார். இதனால் அப்போது இந்த விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை.

இதைத்தொடர்ந்து 64 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இந்த விருது அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. இதற்காக மகசேசே விருது அறக்கட்டளை தலைவர் சுசன்னா, அறங்காவலர் எமிலி அப்ரேரா ஆகியோர் தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் வீட்டுக்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினர்.

தலாய்லாமா அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், இந்த மகசேசே விருதுதான் அவருக்கு கிடைத்த முதல் சர்வதேச விருது என தலாய்லாமாவின் அலுவலகம் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் இந்த விருது, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.