வீட்டில் பதுக்கி வைத்த ரூ.1.72 லட்சம் மதுபானம் சிக்கியது

யாதகிரி:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (11-ந்தேதி) அதிகாைல 6 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு 13-ந்தேதி அதிகாலை 6 மணி முதல் 14-ந்தேதி அதிகாலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கி பதுக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் யாதகிரி மாவட்டம் வடகெரே தாலுகா கொங்கல் கிராமத்தில் ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து இருப்பதாக கலால்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கலால் துறையினர் கொங்கல் கிராமத்தை சேர்ந்த அமினார்டி சித்தண்ணா கவுடா பட்டீல் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு மதுபாக்கெட்டுகள் அட்டைப்பெட்டிகளில் இருந்தது. இதையடுத்து ரூ.1.72 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அமினார்டி சித்தண்ணா கவுடா பட்டீலை கைது செய்தனர். அவர் தேர்தலையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால், மதுபானத்தை வீட்டில் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.