தருமபுரி | பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

பாலக்கோடு வட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த சிலந்தியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ஹரீஷ்குமார்(20). இவர் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடித்து இருசக்கர வாகனத்தில் ஹரீஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையில் மாங்காய் மண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் வந்த சிறிய வகை சரக்கு வாகனம் ஒன்று ஹரீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹரீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீஸார் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.