நீங்க டாக்டரா..? யூனிபார்ம் எங்க..? பாஜக நிர்வாகி வாக்குவாதம்..! நடவடிக்கை என்ன?

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஜன்னத் என்ற பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகி புவனேஸ்வர் ராம் என்பவர் பெண் மருத்துவரை பார்த்து ‘ பணி நேரத்தில் எதற்கு ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் என்று வாக்குவாதம் செய்ததோடு அனுமதியின்றி பெண் மருத்துவரை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இதுதொடர்பாக விளக்கம் அளித்தபோது ‘இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். விசாரணை முடிந்து மாவட்ட மருத்துவ அலுவலரிடம் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்

இந்த நிலையில், பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

அவரது வலியுறுத்தல்; நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.

இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.

எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.