மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காதது மு.க.ஸ்டாலினின் தவறுதான் – குஷ்பு பரபரப்பு பேட்டி.!!
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகாலம் நிறைவடைந்ததால் இதனை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்தது என்ன என்று அமித்ஷா பட்டியல் வெளியிடுவாரா? என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த அமித்ஷாவை வரவேற்பதற்காக நடிகை குஷ்பூ வருகை புரிந்திருந்தார். அவரிடம் ஊடகவியலாளர்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர்.
அதற்கு குஷ்பு பதிலளித்ததாவது:- “விவசாயம், கல்வி, தொழில் என்று அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பயிர் காப்பீடு திட்டம் உள்ளது. இதுபோக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகின்றது.
குழந்தைகளின் சேமிப்பிற்கு செல்வமகள் திட்டம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் இன்சூரன்ஸ் திட்டம், சாதாரண சிறுதொழில் முனைவோரின் மேம்பாட்டிற்காக முத்ரா கடன் உதவி, நாடு முழுவதும் நான்கு கோடி பேருக்கு வீடு, 14 கோடி கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கான அரசு. அனைத்து மாநிலங்களுக்குமான திட்டங்களை அது செயல்படுத்துகின்றது. கடந்த இரு ஆண்டுகளில் இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்காதது மு.க.ஸ்டாலினின் தவறுதான்” என்று பரபரப்பு பதிலளித்தார்.