சிவமொக்காவில் அரசு என்ஜினீயரின் மனைவி மர்ம சாவு

சிவமொக்கா-

சிவமொக்காவில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் மனைவி மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர் மனைவி

சிவமொக்கா டவுன் விஜயநகரை அடுத்த குத்தியப்பா காலனியை சேர்ந்தவர் கமலம்மா (வயது 54). இவரது கணவன் மல்லிகார்ஜூன். பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மல்லிகார்ஜூன், கோவாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

வீட்டில் கமலம்மா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மல்லிகார்ஜூன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார். ஆனால் கமலம்மா செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து மல்லிகார்ஜூன் உடனே தனது உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, மனைவியின் செல்போன் எடுக்கப்படவில்லை என்று கூறினார். இதையடுத்து உறவினர்கள், கமலம்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு கமலம்மா இறந்து கிடந்தார்.

மர்ம சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே துங்காநகர் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கமலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கமலம்மா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்தது. இதனால் இது தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் இது குறித்து கூறமுடியும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள துங்காநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.