5 நடிகர்களுக்குத் தடையா ? – பரபரப்பாகும் திரையுலகம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். “திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் முதலாளி -அந்த முதலாளியை அவமதித்தும் குளறுபடி செய்யும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது,” என்பதும் அந்தத் தீர்மானங்களில் ஒன்று.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமசாமி, “நிறைய நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் அனைவருக்கும் நாங்க வேலை செய்ய மாட்டோம்னு தீர்மானம் நிறைவேற்றியிருக்கோம். இங்க நிறைய தயாரிப்பாளர்கள் நிறைய நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து, தேதி சரியா கிடைக்காம இருக்கு. நடிகர் சங்கத்துக்கு இது குறித்து கடிதம் எழுதி பேசித் தீர்க்கணும்னு சொல்லியிருக்கோம்,” என்றார்.

ஆனால், அந்த நடிகர்கள் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனிடையே, “சிலம்பரசன், விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா” ஆகியோர்தான் அந்த நடிகர்கள் என செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அவர்கள்தான் அந்த நடிகர்கள் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை.

'ஒத்துழைப்பு தரமாட்டோம்' என்பதை சினிமா பாணியில், சங்கத்தின் பாணியில் 'ரெட் கார்டு' என்று சொல்வார்கள். திரையுலகத்தில் இதற்கு முன்பு இப்படி 'ரெட் கார்டு' கொடுத்து சிலரை பணியாற்றவிடாமல் தடுத்த நிகழ்வுகளும் நடந்துள்ளது. சட்டப்பூர்வமாகவே, அதிகாரப்பூர்வமாகவோ இப்படி 'ரெட் கார்டு', அல்லது தடை விதித்துள்ளோம் என்று சொல்ல மாட்டார்கள். மறைமுகமாக அந்த நபர்களையோ, நடிகர்களையோ பணியாற்ற வைக்க வேண்டாம் என நெருக்கடியும், அழுத்தமும் கொடுப்பார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தற்போது வெளிவந்துள்ள இந்த 'ஒத்துழைப்பு இல்லை,' என்பது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும். இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் இதுவரையிலும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.