உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் சிம்பாப்வேயுக்கு எதிரான சுப்பர் சிக்ஸ் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

புலவாயோவில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் உலகக் கிண்ண போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (02) முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

டில்ஷான் மதுஷங்க சிம்பாவேயின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் 30 ஓட்டங்களுக்குள் வீழ்த்திய நிலையில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுகளையும் இந்தத் தொடரில் முதல்முறை களமிறங்கிய மதீஷ பதிரண 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை அணியின் ஆரம்ப ஜோடியான திமுத் கருணாரத்ன மற்றும் பத்தும் நிசங்க 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதன் மூலம் இலங்கை அணியின் வெற்றி இலகுவானது.

திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் பத்தும் நிசங்க தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 102 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் இலங்கை அணி 33.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.