Vadivelu – வாய்ப்பு கேட்கும்போது வேறு மாதிரி பேசிவிட்டார் வடிவேலு.. மனம் நொந்த நடிகை

சென்னை: Vadivelu (வடிவேலு) வடிவேலுவிடம் தான் வாய்ப்பு கேட்கும்போது வேறு மாதிரி பேசிவிட்டார் என நடிகை தேவிஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

வடிவேலுவின் ரீ என்ட்ரி: அதன் காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் அவுட் ஆகிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர் ரசிகர்கள்.

மாமன்னன்: இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம். கடந்த 29ஆம் தேதி வெளியாகி படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வடிவேலு தனது நடிப்பில் பயங்கரமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இன்னொரு முகம்: இந்தப் படத்தின் மூலம் வேறு ஒரு வடிவேலு தமிழ் சினிமாவில் பிறந்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். எமோஷனல் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தமாக நடித்திருக்கிறார். நிச்சயம் இனி வரும் காலங்களில் மிகச்சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்கள் வடிவேலுவுக்காக எழுதப்பட்டு அதில் அவரை நடிக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் வைகைப்புயலின் ரசிகர்கள்.

நடிகையின் குற்றச்சாட்டு: இந்நிலையில் நடிகை தேவிஸ்ரீ என்பவர் வடிவேலு குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு பேட்டியில் பேசிய அவர், “வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்திருக்கிறேன். அதேபோல் விவேக்குடனும் நடித்திருக்கிறேன். ஆனால் அதன் பிறகு வடிவேலுவிடமிருந்து எனக்கு எந்த அழைப்புமே வரவில்லை.

குண்டச்சி: நாய் சேகர் படத்தில் நடிப்பதற்காககூட வடிவேலுவுக்கு ஃபோன் செய்து வாய்ப்பு கேட்டேன். அப்போது என்னை யார் என்றே தெரியாத அளவுக்கு பேசினார். உடனே இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்திருக்கிறேன் என்றதும்; ஓ குண்டச்சியா. சரி சரி ஏதாவது வாய்ப்பு வந்தால் சொல்கிறேன் என கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்” என்றார்.

தொடர் புகார்கள்: முன்னதாக வடிவேலுவுடன் நடித்தவர்கள் அவர் மீது தொடர் புகார்கள் கூறிவருகிறார்கள். போண்டாமணி, சிஸர் மனோகர், பாவா லட்சுமணன் என பலரும் வடிவேலு வளர்ந்த பிறகு எங்களை கண்டுகொள்ளவே இல்லை என சொல்கின்றனர். குறிப்பாக சிஸர் மனோகரோ சீமான் மட்டும் இல்லையென்றால் ஒரு கட்டத்தில் வடிவேலுவை வெட்டி கொன்றிருப்பேன். அந்த அளவுக்கு போய்விட்டேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.