பாவனிக்கு திடீர் ஆபரேஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, சீரியல்களில் நடித்தவர் பாவனி. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். கணவரை இழந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட அமீரை காதலிப்பதாக சொன்னார். நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தார்கள். 'துணிவு' படத்திலும் இருவரும் காதலர்களாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில் பாவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதாகவும், வலியால் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான படங்களை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:

என் வாழ்க்கையில் இந்த 15 நாட்களைக் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. என் கழுத்தில் சிறிய வலி ஏற்பட்டது. வலி நாளுக்குநாள் அதிகரிக்க துவங்கியது. நான் பல எலும்பியல் நிபுணரிடம் ஆலோசித்தேன். பிசியோதெரபியை ஆரம்பித்தேன், ஆனால் வலி தாங்க முடியாமல் போனது. பல தூக்கமில்லாத இரவுகளை கழித்து ஒருகட்டத்தில் வலியால் அழ ஆரம்பித்தேன். இடையில் எனக்கு படப்பிடிப்புகள்கூட இருந்தன. ஓய்வு எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் வலியுடன் ஐதராபாத் சென்றேன். எனது படப்பிடிப்பில் இருந்தவர்கள் மிகவும் ஆதரவாக இருந்ததால், என்னை வீட்டில் இருப்பதுபோல் உணர வைத்தனர். அப்படித்தான் எனது படப்பிடிப்பை முடித்தேன்.

நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி மோசமாகி விட்டது, என்னால் என் வலது கையை தூக்க முடியவில்லை, அது உடைந்தது போல் உணர்ந்தேன். அதிகாலையில் எழுந்து தயாராவது எனக்கு ஒரு பெரிய பணியாக இருந்தது. வலியால் நான் சத்தமாக கத்துவேன். இறுதியாக எண்டோஸ்கோபிக்டிஸ்கெக்டமி அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். வலியிலிருந்து மீட்டவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.

இவ்வாறு பாவனி எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.