ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
ஓம் ராவத் இயக்கத்தில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனம் கிடைத்தது.
இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் ஆதிபுருஷ் படத்துக்கு மிக மோசமான கலெக்ஷன் தான் வசூலாகியுள்ளது.
இதன் காரணமாக ஆதிபுருஷ் தயாரிப்பாளர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த ஆதிபுருஷ்
பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த மாதம் 16ம் தேதி வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் மிக மோசமான தோல்வியை தழுவியதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தி, தெலுங்கில் மட்டுமே தலா 100 கோடிகளுக்கு மேல் வசூலித்த ஆதிபுருஷ், மற்ற மொழிகளில் சுத்தமாக எடுபடவே இல்லை.
ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்தது. பிரபாஸ் ராமர் கேரக்டரிலும் அவருக்கு ஜோடியாக சீதை பாத்திரத்தில் கீர்த்தி சனோனும் நடித்திருந்தனர். அதேபோல், சயிஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே கடும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந்தித்தது. அது படம் வெளியான பின்னரும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக ஆதிபுருஷ் வெளியான திரையரங்குகளில் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் ரிசர்வ் செய்யப்பட்டதும் பயங்கரமாக ட்ரோல் ஆனது. மோஷன் கேப்சர், 3டி, கிராபிக்ஸ், மேக்கிங், திரைக்கதை என ஒட்டுமொத்தமாகவே உடைந்த ஃபர்னிச்சராக தான் ஆதிபுருஷ் வெளியாகியிருந்தது. இதனால், முதல் நாளில் இருந்தே இந்தப் படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
இதனால் ஆதிபுருஷ் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படக்குழு தரப்பில் இருந்து 450 கோடி என அறிவிக்கப்பட்டாலும் உண்மையான நிலவரம் மிக மோசம் எனத் தெரிகிறது. இதுதவிர ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் மட்டுமே ஓரளவு கை கொடுத்துள்ளது. இதனால், ஒட்டு மொத்தமாக 500 கோடி ரூபாய் வசூலை கூட இப்படம் கடந்திருக்க வாய்ப்பு இல்லையாம்.
மிக மோசமான வசூல் காரணமாக ஆதிபுருஷ் திரைப்படம் இதுவரை 100 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஓம் ரவுத், பூஷன் குமார், பிரசாத் சுதார், கிரிஷன் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆதிபுருஷ் படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்த பிரபாஸ், அது தோல்வியானதால் தற்போது சலார் படம் மீது கவனம் செலுத்தி வருகிறாராம்.