தமிழ்நாடு தலைமைச் செயலாளாராக பணியாற்றி வந்த இறையன்பு ஐஏஎஸ் ஜூன் 30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அதே நாளில் புதிய தலைமைச் செயலாளாராக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் பல்வேறு துறைகளில் பல்வேறு மட்டத்தில் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது.
ஏன் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்?ஏற்கனெவே நான்கு முறை நடைபெற்ற அதிகாரிகள் மாற்ற உத்தரவில் 33 அதிகாரிகள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்வாக வசதிக்காகவும், எந்த துறை பொறுப்பை யாருக்கு வழங்கினால் சிறப்பாக செயல்படுவார்களோ அதை ஆராய்ந்தே அதிகாரிகள் மாற்றப்படுவதாக கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
சிவ்தாஸ் மீனா போட்ட உத்தரவு!மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதலாக சில தற்காலிகப் பொறுப்புகளையும் வழங்கி வருகிறார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ். அந்த வகையில் கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பதவி வகிக்கும் தேவ் ராஜ் ஐஏஎஸ், அறிவியல் நகரத் திட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பேர் மாற்றம்!தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு இணைச் செயலாளரான ஆகாஷ் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்த நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தலைமைச் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐந்தாவது முறை மாற்றப்பட்ட அதிகாரிகள் லிஸ்ட்!
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறைச் செயலாளராக உள்ள அருண் ராய் ஐஏஎஸ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்ற பின்னர் ஐந்தாவது முறையாக நடைபெறும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.