கொப்பரை கொள்முதலை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்.பி சிகாமணி வலியுறுத்தல்

புதுடெல்லி: மத்திய அரசின் நாபெட் மூலம் கொப்பரை கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை மக்களவையில் திமுக எம்பியான கவுதம் சிகாமணி வலியுறுத்தினார்

இது குறித்து திமுக எம்.பி. கவுதம் சிகாமணி மக்களவையில் விதி 377-இன் கீழ் பேசியதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் நாபெட் (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு) மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை தேங்காயின் சந்தை விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நாபெட் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காயின் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக தென்னை விவசாயிகள் கோரி வருகின்றனர்.

விவசாயிகளிடம் பெருமளவு கொப்பரை தேங்காய் இருப்பு உள்ளது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். தென்னை விவசாய பரப்பளவில் தமிழகம், தேசிய அளவில் மூன்றாவது இடத்திலும் தேங்காய் உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதன் அளவாக, பரப்பளவில் 4.46 லட்சம் ஹெக்டேரிலும், உற்பத்தியில் 53,518 தேங்காய்களாகவும் உள்ளன. இது ஒரு ஹெக்டேருக்கு 11,692 தேங்காய்கள் விளைகின்றன.

கொப்பரை தேங்காயின் சந்தை விலை ஒரு குவின்டால் ரூ. 11,500-ல் இருந்து ரூ.8,100 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதாவது கொள்முதல் அளவை 56,000 மெட்ரிக் டன்னில் இருந்து 90,000 மெட்ரிக் டன் ஆக அதிகரிக்க வேண்டும். இதனால் கொப்பரை தேங்காயின் சந்தை விலை நிலையாக இருக்கும் என்பதால் தமிழக விவசாயிகள் பலன் அடைவார்கள்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.