எடப்பாடியுடன் டீல் பேசும் சசிகலா? தினகரன், ஓபிஎஸ் பிளான் என்ன? நான்கு மாதங்களில் நடக்கும் மாற்றம்!

அதிமுகவை கைப்பற்றவே அமமுகவை தொடங்கியுள்ளோம் என்று கூறிவந்த டிடிவி தினகரன், அதிமுகவுக்கு எதிராக தனது கட்சியை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். சசிகலாவுக்காக விட்டுவைத்திருந்த தலைவர் பதவியையும் முன்னாள் எம்.பி.கோபாலுக்கு வழங்கிவிட்டார். அதே சமயம் என்றைக்கும் நான் அதிமுக தான் என்று எடப்பாடிக்கு வெள்ளை கொடி காட்டி வருகிறார் சசிகலா.

சசிகலா என்ன செய்கிறார்?அதிமுக பொதுச் செயலாளர் நான் தான். பிரிந்து நிற்கும் அணிகளை எல்லாம் இணைக்கும் வேலையை செய்வேன். அனைவரையும் கட்டாயம் ஒன்றிணைப்பேன் என ஓரிரு ஆண்டுகளாக சசிகலா திரும்ப திரும்ப அதே கருத்தை பேசிவருகிறார். எல்லோரையும் ஒருங்கிணைக்க இந்த இரு ஆண்டுகளில் யாரையெல்லாம் சென்று சந்தித்தார். தன்னை சந்திக்க யாருக்கு அனுமதி வழங்கினார் என்றால் அப்படி குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் நடந்துவிடவில்லை.
எடப்பாடியுடன் நெருக்கம் காட்டும் திவாகரன்?அதிமுகவின் முழு அதிகாரம் சட்டப்படி எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வலுவாக சென்றுவிட்டதை உணர்ந்துள்ள சசிகலா, அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில். ஓபிஎஸ்ஸும் , மன்னார்குடி குடும்பமும் வேண்டாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருந்தாலும், திவாகரன் உடன் ஆரம்பம் முதலே எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தையில் தான் உள்ளது.
எடப்பாடி எடுத்த முடிவு!தினகரன் உடன் ராசியாக இருந்த வரையான சசிகலாவின் நிலைப்பாட்டுக்கும், திவாகரன் பக்கம் வந்த பின்னரான அவரது நிலைப்பாட்டுக்கும் பெரிய மாற்றம் இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலா தான் தன்னை முதலமைச்சராக்கினார் என்பதை எடப்பாடி பழனிசாமி மறக்கவில்லை. ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் அவரை ஓவர் டேக் செய்ய நினைத்ததையும், டெல்லியின் அழுத்தத்தினாலுமே சசிகலா குடும்பத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுக்க தள்ளப்பட்டார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
வெள்ளைக் கொடி காட்டும் சசிகலாசசிகலாவுக்கும் சிறையில் இருந்த தன்னிடம் தினகரன் மிகையாக சொல்லி தவறாக வழிநடத்திவிட்டார் என்ற எண்ணமும் இருக்கிறதாம். எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ், தினகரன் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதனால் சசிகலாவும் ஓபிஎஸ் எத்தனையோ முறை கேட்டும் சந்திக்க அனுமதி கொடுக்கவில்லையாம். தினகரன், ஓபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டி வருமே என்று வைத்திலிங்கம் மகன் திருமணத்துக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டார்.

சசிகலாவின் திட்டம் என்ன?அமமுகவுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதை தினகரன் தரப்புக்கு தீர்க்கமாக தெரியப்படுத்திய பின்னரே தலைவர் பதவியும் நிரப்பப்பட்டுள்ளது. ஜெயா டிவியில் தினகரன் தொடர்பான செய்திகள் ஒளிபரப்புவதற்கும் சசிகலா தடை போட்டுள்ளார். இவையெல்லாமுமே எடப்பாடியின் கவனத்தை பெறுவதற்கு தான். எடப்பாடியும் சசிகலாவை மட்டும் கட்சிக்குள் அனுமதிப்பதற்கோ, தலைமைக் கழகத்தில் ஒரு பதவியைக் கொடுக்கவோ தயங்கவில்லையாம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அதற்கு முட்டுக் கட்டை போடுவதாக சொல்கிறார்கள்.
சசிகலாவை வைத்து எடப்பாடி போடுவாரா தேர்தல் பிளான்?​​
மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள். முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிமுகவை விட்டு பிரிந்துவிட்டன என்று கூறப்படும் நிலையில் சசிகலாவை வைத்து எடப்பாடி பழனிசாமி அதை மாற்றிக் காட்ட திட்டமிடுவாரா என்பது டிசம்பருக்குள் தெரியும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.