வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேக குறைப்பு வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது. இந்த விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலன், ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ‘ரோவர்’ எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் அடங்கியதே சந்திரயான் – 3 விண்கலமாகும்.
விக்ரம் லேண்டர் பிரிப்பு
நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த சந்திரயான்-3 விண்கலத்தின் தொலைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இறுதி வேகக்குறைப்பு
பின்னர், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ சமூகவலைதளத்தில் வெளியிட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவுக்கு 25×134 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. அடுத்த கட்டமாக லேண்டரை நிலவில் தரையிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement