எடப்பாடி பொதுச் செயலாளர் ஆனது செல்லுமா? – அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக

, இணை ஒருங்கிணைப்பாளராக

இருந்து கட்சியை வழிநடத்தி வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை வேண்டுமென்ற முழக்கம் அதிமுகவில் வலுவாக எழுந்தது. பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்வாக விரும்பினர். இதுதொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே பிரச்னை உண்டான நிலையில், பொதுக்குழுவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி பாட்டில்கள் வீசப்பட்டன.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி மீண்டும் கூடியது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். எனினும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்தனர். நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு விசாரித்த இவ்வழக்கில் மொத்தமாக ஏழு நாட்கள் வாதம் நடைபெற்றது. அத்துடன், இரண்டு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு வருமா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா என்பதை அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கைகளில் அதிமுக முழுமையாக சென்றுவிட்டது. சமீபத்தில் ஓபிஎஸ் சொந்த மண்டலத்திலேயே அதிமுக மாநாட்டை நடத்தி செல்வாக்கை நிரூபித்துள்ளார் எடப்பாடி. தீர்ப்பைப் பொறுத்து ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.