ஸ்மைல் ப்ளீஸ்..!! விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

பெங்களூரு,

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.

பள்ளம் போன்ற தடைகளை பக்குவமாக பார்த்து ஒய்யாரமாக நடை போடும் ரோவர் நிலவில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்து சரித்திர சாதனை படைத்தது. இது தொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. இதுதவிர ஆக்சிஜன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.