உதயநிதியை விடுங்க.. இன்பநிதிக்கு உருவான தனி பாசறை.. "எதிர்காலமே".. குதூகலிக்கும் உடன்பிறப்புகள்

புதுக்கோட்டை:
உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கியதற்கே ‘குடும்ப அரசியல்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அவரது மகனான இன்பநிதிக்கு என்று தனியாக பாசறை உருவாக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது படிந்த விமர்சனங்களிலேயே மிகவும் முதன்மையானது ‘குடும்ப அரசியல்’ என்பது தான். தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு கருணாநிதி எத்தனையோ பங்களிப்பை செய்த போதிலும், அவர் தனது மகன்கள், மகள், மருமகன், பேரன்களை அரசியலுக்கு கொண்டு வந்தது இன்றளவும் அவரை விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகிறது.

இது நன்றாக தெரிந்தததால் தான், தனக்கு பிறகு தனது குடும்பத்தில் இருந்து வேறு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆணித்தரமாக கூறியிருந்தார் மு.க. ஸ்டாலின். ஆனால், அவரது மகனான உதயநிதி அடுத்த சில ஆண்டுகளிலேயே அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டார். அத்துடன், அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே அவருக்கு சீட் வழங்கப்பட்டு எம்எல்ஏவும் ஆனார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டே அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

இதனால் மீண்டும் திமுக மீது ‘குடும்ப அரசியல்’ என்ற விமர்சனம் காட்டமாக எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் கூட பல இடங்களில் திமுகவை குடும்பக் கட்சி என வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில், உதயநிதியின் மகனான இன்பநிதிக்கு தனியாக பாசறை உருவாக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதுதொடர்பான போஸ்டர்கள் நிரம்பி இருக்கின்றன.

அந்த போஸ்டரில் இன்பநிதியின் புகைப்படம் உள்ளது. அதற்கு கீழே “இன்பநிதி பாசறை” என எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு “செப்டம்பர் 24-ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா” என அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், முத்தாய்ப்பாக இன்பநிதியின் புகைப்படத்திற்கு பக்கத்தில் “எதிர்காலமே”.. என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. போஸ்டரின் அடியில் இன்பநிதி பாசறை செயலாளர் முக. திருமுருகன், மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் க.செ. மணிமாறன் ஆகியோரின் பெயர்களும், புகைப்படங்களும் இருக்கின்றன.

தற்போது இந்த போஸ்டர் தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சிக்கு இன்பநிதியை அமைச்சர் உதயநிதி அழைத்து வந்து, அவருடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.