தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக வேடிக்கை பார்க்காது.. இறங்கி அடித்த அண்ணாமலை

சென்னை:
தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், அப்படி விடுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்திய சுதந்திர தினம், பெருந்தலைவர்களின் பிறந்தநாள் ஆகிய தினங்களில் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள்; சிறையில் ஒழுக்கமாக நடந்து கொண்டவர்கள் ஆகியோர் அதுபோன்ற தினங்களில் விடுதலை செய்யப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது.

இந்த சூழலில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சில தீவிரவாதிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அதற்கெல்லாம் அவர்களுக்கு அதிகாரமே கிடையாது. தீவிரவாத வழக்கில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது.

அப்படி தீவிரவாத வழக்கில் தொடர்புடைய கைதிகளை விடுவிக்கிறார்கள் என்றால் நிச்சயமாக ஆளுநர் அதை எதிர்க்க வேண்டும். ஆளுநர் அதற்கு கையெழுத்து போடக்கூடாது என்கிற வாதத்தை பாஜக வலியுறுத்தும். பாஜக வேடிக்கை பாத்துக் கொண்டிருக்காது. தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது” என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.