ஆசியக்கோப்பை 2023 இறுதிபோட்டியில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதனையடுத்து இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதன் பிறகு நடத்த எந்தவொரு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றவில்லை. இதனால் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலகக்கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு விட்டது. அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்,ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரீட் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
இதில் ஆசியக்கோப்பையின்போது ஆல்ரவுண்டரான அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார். ஒருவேளை அக்சர் படேல் உலகக் கோப்பையின்போதும் குணமடையவில்லை என்றால் மாற்று வீரர் யார் என்கிற கேள்வி எழும்பி இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். “அக்சர் படேல் சரியான நேரத்தில் குணமடையவில்லை என்றால், இந்திய உலகக் கோப்பை அணியில் யுஸ்வேந்திர சாஹலை விளையாட அனுமதிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் கூட “உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஹாலும், அர்ஷ்தீப் சிங்கும் விடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நிச்சயம் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். சஹால் வெற்றியைத் தேடித்தரும் வீரர். பிற சுழற்பந்து வீச்சாளர்களை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். போட்டியில் வெற்றிக்கான திருப்புமுனையை தன்னால் ஏற்படுத்த முடியும் என சாஹல் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். நான் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அவரைக் கண்டிப்பாக அணியில் எடுத்திருப்பேன்” என்று ஹர்பஜன் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.