‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்த படைப்பாக வெளியான திரைப்படம் ‘அநீதி’. இயக்குநர் ஷங்கர் இப்படத்தைத் தயாரித்திருந்தார்.
பொதுச் சமூகத்தில் எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் ‘அநீதி’யைச் சொல்லும் திரைப்படமான இதில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஜூலை மாதம் வெளியான இத்திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறிய பலரும் தற்போது ஓடிடி-யில் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, காளி வெங்கட்டின் ப்ளாஷ்பேக் போர்ஷன் மற்றும் திருநெல்வேலி வட்டார வழக்கில் வலிகளை மறைத்து அன்புடன் ‘தங்கப்லே..’ என்ற அவரது வசனமும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள நடிகர் காளி வெங்கட், “‘அநீதி’ படத்தை திக்குமுக்காடுற அளவுக்கு கொண்டாடுறீங்க! இதைப் பார்க்கும்போது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் வசந்தபாலன் சாருக்கும், தயாரிப்பாளர் ஷங்கர் சாருக்கும் என் நன்றிகள். என்னுடைய எல்லா படத்திற்கும் தரும் ஆதரவைவிட இப்படத்திற்கு அதிகமான ஆதரவைத் தந்திருக்கிறீர்கள். சமூக வலைதளங்களில் வரும் உங்களுடைய ஒவ்வொருவருடைய விமர்சனத்தைப் படிக்கும்போதும், போனில் அழைத்து வாழ்த்துச் சொல்வதைக் கேட்கும்போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் இந்த அன்பிற்கு கைமாறாக என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் அன்பும் நன்றியும்…” என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.