காசா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஈரான் வெளியுறவு மந்திரி வலியுறுத்தல்

டெக்ரான்,

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து உயிரழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், காசா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘அமெரிக்கா ஒருபுறம் அமைதிக்காக அழைத்தாலும், மறுபுறம் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும் ஆதரிக்கிறது. இந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசா மீது நடைபெறும் மனிதாபிமானம் அற்ற தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டும்” என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.