போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்த அல்ஜீரியா

அல்ஜீயர்ஸ்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 7-ந்தேதி போர் தொடங்கியது. 10 நாட்களுக்கு மேலாக தொடரும் இந்த போரில் இரு தரப்பினரும் சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருகின்றன.

இதற்கிடையே காசா நகரில் உள்ள ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தை எழுப்பின. ஆனால் இந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் நடைபெறும் அனைத்து விளையாட்டுகள், கலாசார மற்றும் அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அல்ஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.