பீஜிங்: இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போரில் அமைதி காத்து வந்த சீனா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ‛‛ தன்னை தற்காத்து கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது” எனக்கூறியுள்ளது.
இஸ்ரேல் — ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் 18 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் துவங்கியதில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால், சீனா இந்த விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறிய சீன அதிபர் ஷி ஜின்பிங், பாலஸ்தீன விவகாரத்தில் விரைவில் தீர்வு காண்பதற்கு அரபு நாடுகள் மற்றும் எகிப்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், அப்பாவி மக்களை கொன்ற ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.,க்கள் சீனாவை வலியுறுத்தினர். இஸ்ரேலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியதாவது: தன்னை தற்காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. அதேநேரத்தில், சர்வதேச சட்டங்களை மதிப்பதுடன், அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும். போர் காரணமாக பதற்றம் அதிகரித்து வருவதும், அப்பகுதியில் சூழ்நிலை மோசமாக உள்ளதும் கவலை அளிக்கிறது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், சர்வதேச விதிகள் மீறப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அரசு முறை பயணமாக வரும் 26 முதல் 28 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, அந்நாட்டு தலைவர்களை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் அமைப்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement