கும்பகோணம்: கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு எதிரொலியாக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர்.
கேரள மாநிலம் களமசேரியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுக் கூட்டம் காலை நடைபெற்றது. அப்போது கூட்ட அரங்கில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ மற்றும் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கோயில் நகரமான கும்பகோணம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவித் துணை ஆய்வாளர் எம்.எஸ்.விவேகானந்தன் தலைமையில் தலைமைக் காவலர் கே.மணி மற்றும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
ரயில் நிலையத்துக்கு வந்து, செல்லும் பயணிகளின் உடைமைகளைத் தீவிர சோதனையிட்டப் பின், ரயில் நிலையத்தினுள் அனுமதித்தனர். இதுபோல் இன்று கும்பகோணத்துக்கு வந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட ரயில்களில் வந்து சென்ற பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
பின்னணி: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.