கேஜிஎப் படத்திற்கு முன் யஷ் என்பவர் யார்?; அல்லு அரவிந்த் காட்டம்

கன்னட திரைப்படங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே வெளியாகி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது கேஜிஎப் திரைப்படம். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி அந்த படத்தின் கதாநாயகனாக நடித்த ஹீரோ யஷ்ஷை தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியது. அதற்கு பின் மீண்டும் எதிர்பார்ப்புடன் வெளியான கேஜிஎப் 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தென்னிந்திய மொழிகளில் அவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் உருவானது.

அதே சமயம் இப்படி அவரை தங்களது மொழிகளில் மிகப்பெரிய ஆளாக ரசிகர்கள் கொண்டாடுவதை சிலர் விரும்பவில்லை என்பதை சமீபத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தெலுங்கில் உருவாகியுள்ள கோட்ட பொம்மாளி என்கிற படத்தின் டீசர் வெளியிட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்தும் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசும்போது, ஒரு படம் வெற்றி பெற்றதும் திடீரென சம்பளத்தில் பலமடங்கு உயர்த்தும் கதாநாயகர்கள் குறித்து தனது கருத்தை காட்டமாக வெளிப்படுத்தினார்.

குறிப்பாக கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் யஷ் மிகப்பெரிய அளவில் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறிய அல்லு அரவிந்த் அந்த படம் வெளியாவதற்கு முன்பு யஷ் என்பவர் யார் என்று கர்நாடகாவை தாண்டி யாருக்கும் தெரியாது. எதற்காக அந்த படம் அவ்வளவு பரபரப்பானது..? காரணம் அந்த படத்தின் பிரம்மாண்டம் தான்.. ஒரு படத்தின் ஹீரோ யாராக இருந்தாலும் அதன் மேக்கிங் தான் ரசிகர்களிடம் கொண்டு செல்கிறது” என்று பேசினார்.

அல்லு அரவிந்தின் இந்த பேச்சால் கோபமான யஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.. அதில் ஒருவர் கூறும்போது ஆல வைகுண்டபுரம்லோ படத்தின் ரிலீசுக்கு முன்பாக உங்களது மகன் அல்லு அர்ஜுனும் விஜய் தேவரகொண்டா போல பத்தோடு பதினொன்றான நடிகர் தான். அதன்பிறகு தானே இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அப்படித்தான் நடிகர் யஷ்ஷும்.. யாரையும் மட்டமாக நினைக்காதீர்கள்” என்று கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.