பாமாயில், துவரம் பருப்பு கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்குகள் தள்ளுபடி

சென்னை: பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு பொதுவிநியோகத் திட்ட விநியோகத்துக்காக 6 கோடி பாக்கெட் பாமாயில் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான டெண்டர்களுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக தமிழக அரசுசார்பில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 கோடி பாக்கெட் பாமாயிலை கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டர் கடந்த நவ. 8ம் தேதி கோரப்பட்டது.

இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த தர்என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளின்படி ரூ. 2கோடி வரையிலான டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க 15 நாட்கள்அவகாசம் அளிக்க வேண்டும். ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட டெண்டர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். இந்த விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் பாமாயில் கொள்முதலுக்கான ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட டெண்டருக்கு நவ. 22 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது டெண்டர் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே இந்த டெண்டருக்கு தடை விதித்து, அதுதொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக குறுகிய கால டெண்டர் அடிப்படையில் பாமாயிலை கொள்முதல்செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு சட்டவிதிகளும் மீறப்படவில்லை என்றார்.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அவசர தேவைக்காக குறுகிய கால டெண்டர் கோர சட்டவிதிகளில் வழிவகை உள்ளது. இந்த டெண்டரும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் கோரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு ஏற்புடையதல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல 60 ஆயிரம் மெட்ரிக்டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.