எதிர்காலத்தில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர்

கல்வி அமைச்சின் தலையீட்டுடன் எதிர்காலத்தில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிராமப் பகுதிகளில் குறிப்பாக மூன்று இலட்சம் பாடசாலை மாணவிகளை மையப்படுத்தியதாக இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்

கல்வி அமைச்சின் மீதான ஒதுக்கீட்டு வரவு செலவுத்திட்ட விவாதத்தில் இது தொடர்பாக முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன். நமது நாட்டில் ஆரம்பப் படசாலைகளில் 16 இலட்சம் பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள்.

அதில் தரம் 5இலிருந்து அதற்கு மேல் 24 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இவர்களில் 12இலட்சம் வரையான மாணவிகள் காணப்படுகிறார்கள். குறைந்தது 3இலட்சத்திலிருந்து ஆரம்பித்து மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சி. எஸ். ஆர். திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர் மூன்று இலட்சம் பிள்ளைகளில் ஆரம்பித்து படிப்படியாக அதிகரிப்பதற்கு முதற்கட்டமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

10இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை வழங்கினால் சகல பிள்ளைகளும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர். பிரதான பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு இது பெரிய அவசியமானதொன்றாக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

எட்டு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்காக மூவாயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கும் திட்டம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்டவுள்ளதாகவும் இதன் போது குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி ஆரம்பித்து 27ஆம் திகதி நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கஷ்ட, பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் நான்கு இலட்சத்து ஏழாயிரம் பிள்ளைகளுக்கும் (407,000) இவ்வாறே வவுச்சர் வழங்கப்படும்.

அடுத்த வருடத்தில் மேலும் ஒதுக்கீடுகளைப் பெற்று, அதிகளவான எண்ணிக்கையில் இவ்வவுச்சர்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேலும் விபரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.