சென்னையில் இன்று நள்ளிரவு வரை மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேசுகையில், “சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் மேற்கு நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பழவேற்காடு அருகே உள்ள கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. மேலும் நகர்ந்து நெல்லூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது. இருப்பினும் மேற்கு மற்றும் தென் பகுதியில் அடர்ந்த மழை மேகங்கள் காணப்படுகின்றன. இதனால், இன்று நள்ளிரவு வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 8.30 மணி அளவில் செம்பரம்பாக்கத்தில் 16.2 செ.மீ., ஆவடியில் 28 செ.மீட்டர் மழையும் பதிவானது. நகரப்பகுதிகளில் 20 செ.மீட்டர் மழை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் காலை முறையே 23, 25 செ.மீட்டர் மழை பதிவானது. தற்போது நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 40 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்தப் புயலானது சென்னைக்கு அருகே மையம் கொண்டதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடலுக்கு அருகில் புயல் இருந்தால் கடல் எப்போதும் சீற்றமாகவே இருக்கும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.