அய்ஸ்வால்: மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அங்கு ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ளது ஜோரம் மக்கள் இயக்கம்.
முன்னதாக, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
மிசோரம் மாநிலத்தைப் பொறுத்த வரை அங்கே பிராந்தியக் கட்சிகளுக்கு தான் மவுசு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் அவ்வளவு அபிமானம் இல்லை. அதனால், காங்கிரஸ் அங்கு பெரிய அளவில் பிரச்சாரங்களை முன்னெடுக்கவில்லை. தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சியில் கூட்டணியில் இருந்ததால் பாஜக பிரச்சாரத்தை சற்று தீவிரப்படுத்தியிருந்தது. ஆனால் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கத்துக்கே Zoram People’s Movement மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே ஜோரம் மக்கள் இயக்கம் முன்னிலை வகித்தது. 40 தொகுதிகளில் பெரும்பான்மை இலக்கைவிட 6 இடங்கள் அதிகமாக அதாவது 27 தொகுதிகளை அக்கட்சிக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவர் லல்டுஹோமா ஓர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரே முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார்.
மிசோரம் மாநிலம் கிறிஸ்துவ மக்கள் அதிகம் கொண்ட மாநிலம். அதனால், மிசோரம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்த நிலையில் இன்று (டிச.5) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.