வட மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டு, வரும் மக்களவை தேர்தலுக்கு இண்டியா கூட்டணியுடன் இணைந்து தயாராவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட தகவலில் கூறியதாவது:
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் எங்கள் கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து காங்கிரஸ் மீண்டு, வரும் மக்களவை தேர்தலுக்கு இண்டியா கூட்டணியுடன் இணைந்து தயாராகும். ம.பி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி. இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.