விராட் கோலி மீண்டும் தந்தையாகப் போகிறார். அவரது மனைவி அனுஷ்கா சர்மா விரைவில் இரண்டாவது முறையாக தாயாக உள்ளார். இதனை தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். விராட் கோலி இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தபோதும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கான காரணங்களை பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் விராட் கோலி தெரிவித்த நிலையில், அவர்களும் அவரின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் பொதுவெளியில் எந்த காரணத்துக்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார் என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை.
விராட் கோலியின் விலகல் குறித்து பல்வேறு தகவல்கள் சூசகமாக வெளியானது. அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறார் என்றும், விராட் கோலியின் தாய் உடல்நிலை சரியில்லை என்றும் கூறப்பட்டது. அதில், விராட் கோலியின் தாய் நலமாக இருப்பதாக அண்மையில் அவரது சகோதரர் தெரிவித்தார். இதனையடுத்து விராட் – அனுஷ்கா தம்பதியின் இரண்டாவது குழந்தையின் வருகைக்காக தான் காத்திருக்கிறார்கள் என்ற செய்தி உலா வந்தது. அதனை டிவில்லியர்ஸ் இப்போது உறுதிபடுத்தியிருக்கிறார்.
டிவில்லியர்ஸ் தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, ” விராட் கோலி இப்போது குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம். மகிழ்ச்சியான விஷயம் தான். விராட் – அனுஷ்கா தம்பதி இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான விஷயம். இதுபோன்ற நேரங்களில் குடும்பத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இப்படியான நேரத்தை குடும்பத்துடன் செலவிடவில்லை என்றால் வாழ்வதில் அர்த்தமே இல்லை. விராட் கோலி அதை தான் செய்து கொண்டிருக்கிறார்.”என தெரிவித்தார்.
விராட் கோலியும் டிவில்லியர்ஸூம் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக விளையாடினார்கள். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அப்போது முதல் இருவரும் நடபில் உள்ளனர். விராட் கோலி அனுஷ்கா சர்மாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே வாமிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது.