3ஆவது டெஸ்டில் சுப்மான் கில்லும் கிடையாதா…? இன்றும் விளையாடவில்லை – காரணம் என்ன?

IND vs ENG Highlights In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் (IND vs ENG 2nd Test) போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த போட்டி இன்றைய தினமே நிறைவடைந்துவிடும் என்றாலும், போட்டி தற்போதும் யார் பக்கம் செல்லும் என்பதை கணிக்க இயலவில்லை எனலாம். மேலும், அடுத்த போட்டிக்கு ஒரு நீண்ட இடைவேளை இருப்பதால் ரசிகர்கள் சற்று உற்சாகம் குறைவாக இருக்கின்றனர்.

அந்த வகையில், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து தொடரில் தனது பலத்தை ஈடுசெய்யும் எனலாம். மேலும், உணவு இடைவேளைக்கு பின் இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகளும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 200 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது. 

ஸ்டோக்ஸ் ரன் அவுட்

ஸ்டோக்ஸ் ரன் அவுட்டான பின்னர், ஃபோக்ஸ் – ஹார்ட்லி ஆகியோர் இன்னும் களத்தில் இருப்பதால் இந்திய அணி இந்த ஜோடியை விரைவாக பிரிக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அஸ்வின் இந்த இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் அவர் டெஸ்ட் அரங்கில் 500ஆவது விக்கெட்டை அவர் நிறைவு செய்வார். 

இப்படி இன்றைய ஆட்டம் அனல் பறந்து வரும் வேளையில், இந்திய அணிக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மீதம் உள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணி வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். மூன்றாவது போட்டி பிப். 15ஆம் தேதிதான் தொடங்க உள்ளது என்பதால், இதற்கிடையில் சுமார் 10 நாள்கள் இடைவெளியிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணி அறிவிக்கப்படலாம். 

அடுத்தடுத்த போட்டிகளில் யார் யார்?

இதில், விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், அடுத்த மூன்று போட்டிகளுக்கு விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மேலும், ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் காயத்தால் இரண்டாவது போட்டியை தவறவிட்ட நிலையில், இவர்களில் யார் எந்த போட்டியில் தயாராவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தொடர்ந்து, இவர்களுக்கான மாற்று வீரர்களை தக்கவைப்பதும் அணிக்கு சற்று தலைவலியாக இருக்கலாம். ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் ஸ்குவாடில் இருப்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் ஃபார்மில் இல்லாததும் அடுத்த மூன்று போட்டிகளுக்கான ஸ்குவாடை அறிவிப்பதில் சற்று சிக்கலை ஏற்படுத்தும் எனலாம். 

காயத்தில் கில்

இந்நிலையில், நட்சத்திர வீரர் சுப்மான் கில்லும் அடுத்த போட்டியில் (IND vs ENG 3rd Test Match) விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. அவர் வலதுகை ஆள்காட்டி விரலில் காயம் (Shubman Gill Injury) ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் இன்றைய நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்ய வரவில்லை. இந்த காயம் நேற்று முன்தினம் பீல்டிங்கின்போது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

UPDATE: Shubman Gill hurt his right index finger while fielding on Day 2. He won’t be taking the field today.#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank

— BCCI (@BCCI) February 5, 2024

அவருக்கு பதில் சர்ஃபராஸ் கான் பீல்டிங்கில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து சற்று நம்பிக்கையை ஏற்படுத்திய கில் தற்போது காயத்தில் சிக்கியிருப்பது சற்று கவலைக்குள்ளாக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.