“புதுப்பேட்டை -2 இந்த வருடத்தில் எடுப்பேன்னு நம்புறேன்’ என இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட தகவல் வீச்சுதான், 18 வருடத்துக்கு முந்தைய ஃப்ளாஷ்பேக்கை நினைவுபடுத்தி ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறது.
ரவுடியிஸம், வன்முறை, ஆழ் மனதின் குரூரம், பழிக்குப்பழி என அரசியல் ரத்த வெறியாட்டம் ஆடிய படம் ‘புதுப்பேட்டை’. படத்தில் வரும் வசனங்கள்கூட உடம்பில் கீறல் போட்டுக்கொண்டே இருக்கும். ரஜினிக்கு ஒரு பாட்ஷா என்றால் தனுஷுக்கு ஒரு புதுப்பேட்டை. தமிழ் சினிமாவில் டாப்லெவல் ‘ரவுடியிச அரசியல்’ படம் என்றால் புதுப்பேட்டைதான். அப்படிப்பட்ட, படத்தின் பார்ட்-2 வரப்போகிறது என்கிற செய்தியே, எக்ஸைட்மென்ட்டில் இதயத்துடிப்பை எகிறவைப்பதுதான். சோனியா அகர்வாலின் இன்னோசன்ட்டான நடிப்பும் நடுங்கவைக்கும். அந்தளவுக்கு செல்வி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்திருந்தார். தற்போது, ‘புதுப்பேட்டை 2’ டாக் ஆகியிருப்பதால், இப்படத்தின் நாயகி சோனியா அகர்வாலிடம் பேசியபோது…
”இத்தனை வருடம் கழிச்சும் புதுப்பேட்டை படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த கிரடிட் எல்லாம், நிச்சயமா செல்வாவுக்குத்தான் போய் சேரணும். ஏன்னா, அவர் மைண்டுல என்ன நினைக்கிறாரோ அது வர்றவரைக்கும் விடமாட்டார். அது, எத்தனை டேக் வேணாலும் போகும். அதேநேரம், நாம நல்லா பண்ணினோம்னா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தேங்ஸ் சொல்லி பாராட்டுவார். எனக்கு வித்தியாசமான அனுபவம் இந்தப் படத்துல நடிச்சது.
அதுவும், படத்துல இந்த ஃபர்ஸ்ட் நைட் காட்சியெல்லாம் எதுக்குன்னு யோசிச்சேன். பயந்த மாதிரி நடிக்க சொன்னாங்க. சரி, டைரக்டர் சொல்றாரேன்னுதான் நடிச்சேன். ஆனா, அந்த காட்சி படமா வந்த பிறகுதான் புரிஞ்சது. இன்னமும் அந்தக் காட்சி பேசப்பட்டுக்கிட்டிருக்கு. இப்படி, அந்த படத்துல பல காட்சிகளை சொல்லமுடியும்” என்பவரிடம் ‘புதுப்பேட்டை 2’ வில் நடிக்க அழைப்பு கொடுக்கப்பட்டால் மீண்டும் நடிப்பீங்களா?’ என்று நாம் கேட்டபோது,
“கண்டிப்பா புதுப்பேட்டை-2 படத்தில் நடிக்க கூப்பிட்டா நடிப்பேன். நடிப்பு என்னோட தொழில். செல்வாக்கூட சேர்ந்து ஒர்க் பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா, இதுவரை ’புதுப்பேட்டை 2’ வுக்கு நடிக்கவேண்டும் என்று எந்த அழைப்பும் வரவில்லை. யார் யார் இதுல நடிக்கப்போறாங்கன்னும் எனக்கு தெரியாது” என்றவரிடம், ’நிறைய படங்கள் பார்ட்-2 எடுக்கும்போது பார்ட்-1 அளவுக்கு இல்லாம போயிருக்கு. ’புதுப்பேட்டை 2’ அறிவிப்பை எப்படி பார்க்குறீங்க?” என்று கேட்டபோது,
“அதே நடிகர்கள், அதே டெக்னீஷியன்கள், அதே இயக்குநர், அதே புரடியூஸர் எடுத்தா கண்டிப்பா படம் சக்சஸ்தான் ஆகும். எல்லாத்தையும் மாற்றிட்டு புதுசா ட்ரை பன்றதாலதான் நீங்க சொன்ன மாதிரி ஆகிடுது. பார்ட்- 2 படங்கள் வர்றதுல தப்பு இல்ல. பார்ட்-1 ல இருந்த மெனக்கெடுத்தலைவிட அதிக எஃப்பெர்ட் போடணும்” என்கிறவர், ’செல்வராகவன் இயக்கத்தில் நடிச்சதிலேயே உங்களோட ஃபேவரைட் படம், பாட்டு எது?’ என்றோம்,
“படம்னா எடுத்துக்கிட்டா, ’7 ஜி’ ரெயின்போ காலனிதான் ஃபேவரைட். ஏன்னா, அனிதா கேரக்டர்ல நடிச்ச மாதிரியே இல்ல. நிஜத்துல வாழ்ந்தமாதிரியே இருந்துச்சு. கதை கேட்கும்போதே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அனிதா கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமானது. அதனாலதான், நான் நடிச்ச படங்களிலேயே ரொம்ப பிடிச்ச படம் ’7 ஜி’ன்னு சொல்றேன். ‘காதல் கொண்டேன்’ ல நெஞ்சோடு கலந்திடு பாட்டு, ’7 ஜி’யில ’கண் பேசும் வார்த்தைகள்’, ‘நினைத்து நினைத்து’ ‘புதுப்பேட்டை’யில ’புல் பேசும் பூ பேசும்’ பாடல்கள் பிடிக்கும்.
என்னோட ஆரம்பக் கட்டத்துல சினிமா கரியர்ல இருந்து இப்போ இண்டிபென்டன்டா ஒர்க் பன்றேன்னா அதுக்கு நிச்சயமா காரணம் செல்வாதான். அவர், என்னோட குரு. அதேமாதிரி தனுஷும் எனக்கு குருதான். அவர்க்கிட்டேயிருந்து நடிப்பை கத்துக்கிட்டேன்” என்கிறார்.