பிசிசிஐ கொடுத்த அழுத்தம்! இஷான் கிஷன் எடுத்த முக்கிய முடிவு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டதாக செய்திகள் வெளியானது. அதன்படி, இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் அவர்களின் மாநிலம் சார்ந்த அணிக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று கூறி உள்ளது.  இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தவிர அனைவரும் கண்டிப்பான முறையில் விளையாட வேண்டும் என்று எச்சரித்து இருந்தது.  பெரும்பாலான வீரர்கள் ரஞ்சி கோப்பை போட்டிகளை புறக்கணித்து வருவதால், இந்திய அணியின் பேட்டிங் தரம் குறைந்துள்ளதாக பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது.  இதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார். தற்போது வெளியான அறிக்கையின்படி, இஷான் கிஷன் 2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு முன்பு, மும்பையில் நடைபெறும் DY பாட்டீல் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.  மேலும், இஷான் கிஷன் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் தனது பெயரை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  DY பாட்டீல் போட்டியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்க உள்ளார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இடம் பெற்று இருந்தார் கிஷன். 

பிறகு தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு நடைபெற்ற தொடர்களில் இஷான் கிஷனின் பெயர்கள் இடம்பெற வில்லை. இந்நிலையில், DY பாட்டீல் போட்டியில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இஷான் கிஷன் இடம் பெறவில்லை.  கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள போட்டிகளில் துருவ் ஜூரெல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டியில் ஜார்கண்டின் அணிக்காக இஷான் விளையாடி வருகிறார்.  அடுத்த மாதம் ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், இஷான் ரஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனநிலை காரணமாக ஓய்வு எடுக்க சென்ற இஷான் கிஷன் துபாயில் தோனியுடன் பார்ட்டிகளில் காணப்பட்டார்.  பிறகு, பாண்டியாவுடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.  

இஷான் கிஷனை உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என்று பிசிசிஐ பலமுறை எச்சரித்தும் அவர் பங்கேற்கவில்லை.  இதன் காரணமாக தான் அவர் தற்போது அணியில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் இடம்பெற்று இருந்தார். அதற்கு முன், ஆசிய கோப்பை, கரீபியன் சுற்றுப்பயணம் மற்றும் பிற இருதரப்பு தொடர் போட்டிகளில் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற்று வந்தார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.