துணை இல்லாமல் கூட பயணம் செய்துவிடலாம், ஆனால் இணையம் இல்லாமல் பயணம் செய்யமாட்டார்கள். அந்தளவுக்கு செல்போனும் இணையமும் அன்றாட பகுதியாக நம்மில் மாறிவிட்டது. அப்படியான சூழலில் எல்லா இடங்களிலும் சொந்த மொபைல் டேட்டாவையே பயன்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் இந்தியாவில் பல்வேறு ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை இருக்கிறது. இந்த வைஃபை நெட்வொர்கை எப்படி பயன்படுத்துவது? என தெரிந்து கொண்டீர்கள் என்றால் ரயில் பயணங்களின்போது இது மிகவும் உபயோகமாக இருக்கும். அவசர காலத்துக்கு ரயில் நிலையத்தில் இருக்கும் வைஃபை சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi
முக்கியமான மக்கள் அதிகம் கூடும் பிரபலமான ரயில் நிலையங்களில் ரயில்வே துறையில் இலவச வைஃபை இருக்கும். உதாரணமாக சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லும்போது பயணிகள் இலவச வைஃபை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சேவை ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனமான RailTel உடன் இணைந்து கூகுள் INC வழங்குகிறது. இது அரசின் டிஜிட்டல் இந்தியா முயற்சிக்கு ஆதரவளிக்கிறது.
ரயில் நிலைய Wi-Fi ஐ எவ்வாறு பெறுவது?
– உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் Wi-Fi ஆன் செய்யவும்.
– “ரெயில்வைர் நெட்வொர்க்” ஐக் கண்டுபிடித்துத் தேர்ந்தெடுக்கவும்.
– மொபைலில் இருக்கும் கூகுள் உள்ளிட்ட Search engine -ஐ பயன்படுத்தி railwire.co.in -க்குச் செல்லவும்.
– அங்கு உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
– உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபிஐ பெற்று, அதனை உள்ளிடவும்.
– இப்போது நீங்கள் ரெயில்வைரின் இலவச Wi-Fi சேவையுடன் இணைக்கப்படுவீர்கள்.
ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதியை வழங்குவது நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கூகுள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே துறை இந்த முயற்சியை எடுத்துள்ளது. டிஜிட்டல் சேவைகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவை இல்லாத பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் இந்த இலவச வைஃபை மிகவும் உபயோகமாக இருக்கும். பிறரை தொடர்பு கொள்ளவும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.