இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து அதிரடி நீக்கம் – ஜெய்ஷா உத்தரவு

இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் புறக்கணித்ததால், பிசிசிஐ அவர்கள் மீது நடவடிக்கை  எடுத்துள்ளது. அவர்கள் இருவரும் ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என ஜெய்ஷா எச்சரித்தபோதும், அவரவர் மாநிலஙளுக்கான போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023 – 24 ஆம் ஆண்டுக்கான வீர ர்களுக்கான ஒப்பந்தத்தில் அவர்கள் இருவரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ 2023-24 ஆண்டுக்கான வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை இந்திய அணிக்கான சம்பள பட்டியல் 4 பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கான ஊதிய தொகை கொடுக்கப்பட இருக்கிறது. பிசிசிஐ கிரேடு A+  கேட்டகிரியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

கிரேடு A கேட்டகிரியில் ஆர் அஸ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். கிரேடு பி பிரிவில் சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளனர். கிரேடு சி பிரிவில் மொத்தம் 15 வீரர்கள் உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் உள்ளனர். 

மேலும், துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், அவர்கள் தரம்சாலா டெஸ்ட் போட்டியில், அதாவது இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டில் பங்கேற்றால், கிரேடு C-ல் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்ததில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, பிசிசிஐ அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அதில், இந்த சம்பள பட்டியலில் இருக்கும் தேசிய அணியில் விளையாடாத பிளேயர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.