அரசு பேருந்தைச் சிறைபிடித்த படுகர் இன மக்கள்; `தீண்டாமை கடைப்பிடிக்கின்றனர்' – SC, ST மக்கள் குமுறல்

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொரனூர் கிராமம். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிக்கப்பத்தி மந்து என்ற தோடர் பழங்குடி கிராமம். முறையான சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தில் 12 பழங்குடி குடும்பங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராம மக்களும் தங்களின் போக்குவரத்து தேவைக்கு எப்பநாடு கிராமம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை மட்டுமே நம்பி இருந்தனர்.

அரசு பேருந்து

எப்பநாட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ள கொரனூர் வரை அரசு பேருந்தை இயக்கினால் கொரனூர் கிராம மக்கள் பயனடைவதுடன், பிக்கப்பத்தி மந்து மக்களின் நடைப்பயணம் 4 கிலோமீட்டரில் இருந்து 2 கிலோமீட்டராக குறையும் என்பதால், எப்பநாடு வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை 2 கிலோமீட்டர் நீட்டித்து கொரனூருக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க வேண்டும் என இரண்டு கிராம மக்களும் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கொரனூர் வரை அரசு பேருந்து சேவையை நீட்டித்து உத்தரவிட்டது. ஊட்டியில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கொரனூர் கிராமத்திற்கான புதிய பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் மாலை ஊட்டியிலிருந்து எப்பநாட்டிற்கு பேருந்து சென்ற நிலையில், அங்கிருந்து கொரனூருக்கு பேருந்தைச் செல்லவிடாமல் எப்பநாடு மக்கள் தடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, `உங்கள் கிராமத்திற்கு பேருத்தை அனுப்ப முடியாது’ என இறங்கி நடக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அச்சமடைந்த அந்த மக்கள் நடந்தே சென்றுள்ளனர். அரசு பேருந்தை தங்கள் கிராமத்திற்கு வரவிடாமல் தடுக்கும் எப்பநாடு கிராம மக்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடி, பட்டியல் இன மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவின் பேரில் நேற்று மாலை கொரனூர் சென்ற அரசு பேருந்தை எப்பநாட்டிலியே படுகர் இன மக்கள் தடுத்து நிறுத்தயுள்ளனர். பேருந்தை இயக்கவிடாமல் நள்ளிரவு வரை சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். கொரனூருக்கு பேருந்து செல்ல அனுமதிக்க முடியாது என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உத்தரவின் அடிப்படையில் தங்களின் கிராமத்திற்கான பேருந்து சேவையை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மக்கள் முற்றுகை

இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், ” அடிப்படை தேவைக்காக வெளியில் செல்ல இரண்டு கிராம மக்களும் 6 முதல் 8 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. பேருந்து சேவையை நீட்டிக்க வலியுறுத்தி பல ஆண்டுகள் போராடினோம். ஒருவழியாக இப்போது தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பட்டியல் இன மக்கள் வாழும் கிராமத்தின் பெயரில் அரசு பேருந்து இயக்குவதையோ எங்கள் ஊருக்கு பேருந்து வந்து செல்வதையோ பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படுகர் இன மக்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாக எங்களை இப்படி வஞ்சிக்கிறார்கள். ஆனால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளோ எங்களை அனுசரித்துப் போகச் சொல்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தீண்டாமையைக் கடைப்பிடித்து அரசு பேருந்து சேவையை தடுக்கும் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தெரிவித்த எப்பநாடு கிராம‌ மக்கள் சிலர், “எங்கள் ஊருக்கான‌ பேருந்தை அப்படியே இயக்குங்கள். அவர்கள் கிராமத்திற்கு என்று புதிதாக வேறு பேருந்தை இயக்குங்கள் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ” என்றனர்.

போலீஸார்

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, “அரசு அறிவிப்புபடி கொரனூர் வரை பேருந்து இயக்கப்படும். யாராவது தடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி தடுத்தால் நானே நேரில் சென்று பேருந்தை இயக்க வைப்பேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.