தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அப்துல் கரீம் துண்டா விடுதலை

புதுடெல்லி: தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்இருந்து அப்துல் கரீம் துண்டா (81) விடுதலை செய்யப்பட்டார்.

டெல்லியை சேர்ந்த அப்துல் கரீம் துண்டா கடந்த 1981-ம் ஆண்டில் தலைமறைவானார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்ற அவர் லஷ்கர் இ தொய்பாதீவிரவாத இயக்கத்தில் இணைந்தார். நாடு முழுவதும் நடைபெற்ற 40-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அப்துல் கரீம் துண்டாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2013-ம்ஆண்டு ஆகஸ்டில் இந்திய- நேபாள எல்லையில் துண்டா கைது செய்யப்பட்டார்.

கடந்த 1993-ம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானின் கோட்டா, உத்தர பிரதேசத்தின் லக்னோ, கான்பூர், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிர தலைநகர் மும்பை உள்ளிட்ட நகரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அப்துல் கரீம் துண்டா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதே வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இர்பான், ஹமிமுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட துண்டா மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.