அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த பிஜி தீவின் கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் கலவெடி வோடோ ராவோ (Kalaveti Vodo Ravu) அவர்கள் 2024.02.21 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது பிஜி அமைச்சர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரைச் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகளில் இரு நாடுகளும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக பிஜி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் பிஜி அமைச்சர் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் கலரியில் இருந்து பாராளுமன்ற விவாதத்தை பிஜி அமைச்சர் பார்வையிட்டதுடன், அவர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை கௌரவத்துடன் வரவேற்றப்பதாக சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார்.