திருச்சி: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் காதர் மொய்தீன் அளித்த பேட்டியில், பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விவரித்த அவர், “ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார்” என்று அறிவித்தார்.
எனினும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடலாம் என சொல்லப்பட்ட நிலையில், இந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாக காதர் மொய்தீன் தெரிவித்தார்.