சென்னை: பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர், பணி ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடி தேர்வில்காலியிடங்களின் எண்ணிக்கை2,455 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகளில் 1,933 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த காலியிடங்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர்மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றில் உள்ளன.
பணியின் தன்மைக்கேற்ப சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள், டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்புடன் சுகாதார ஆய்வாளர் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்.9-ம்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1933-ல்இருந்து 2104 ஆக முதலில் உயர்த்தப்பட்டது. தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 2104-ல் இருந்து 2,455 ஆக அதிகரிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு ஜூன் 29, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 12-ம் தேதி முடிவடைகிறது.
20 சதவீத இடங்கள்: ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விண்ணப்ப முறை, துறைகள் வாரியாக எந்தெந்த இடங்களில் எந்தெந்த பதவிகள் காலியாக உள்ளன, கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகிய அனைத்து விவரங்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.