லக்னோ: சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பர், ராஷ்ட்ரிய லோக் தல் எம்எல்ஏ அனில் குமார் உள்பட 4 பேர் உத்தரப் பிரதேச அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பர், ராஷ்ட்ரிய லோக் தல் எம்எல்ஏ அனில் குமார், பாஜக எம்எல்ஏக்கள் சுனில் குமார் ஷர்மா, தாரா சிங் சவுகான் ஆகிய 4 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுனில் குமார், “முதல்வரும், கட்சியும் எனக்கு வழங்கிய பொறுப்பை பொறுப்புடன் நிறைவேற்றுவேன். கட்சி எனக்கு என்ன கற்றுக்கொடுத்ததோ அதன்படி செயல்படுவேன். மக்களவைத் தேர்தலில் இந்த முறை 80 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
மற்றொரு அமைச்சரான ராஜ்பர், “ஏழைகளுக்கு சேவை செய்வதை இலக்காகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அந்த இலக்கை நிறைவேற்ற, அரசின் திட்டங்களை ஏழைகளின் வீட்டு வாசலுக்குக் கொண்டு செல்வோம். அவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை. சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.
மற்றொரு அமைச்சரான தாரா சிங் சவுகான், “எனது கடமைகளை முழு பொறுப்புடன் நிறைவேற்றுவேன். நான் முன்பும் அதைச் செய்தேன்; தற்போதும் அதையே செய்வேன். மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக்கும் அளவுக்கு முனைப்புடன் செயல்படுவோம்” என்று கூறினார்.
அமைச்சராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனில் குமார், “இது எனக்கு ஒரு சிறந்த தருணம். இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். எனது தலைவர் ஜெயந்த் சவுத்ரி, எங்கள் முதல்வர் ஆதித்யாநாத், பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி. தேசிய ஜனநாயகக் கூட்டணியை நாங்கள் வலுப்படுத்துவோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் கோஷி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தாரா சிங் சவுகான், பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், எம்எல்சியாக அவரை பாஜக தேர்வு செய்தது. தற்போது அவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதேபோல், சமாஜ்வாதி கட்சியோடு நீண்ட காலம் நெருக்கமாக இருந்த சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜக கூட்டணியில் இணைந்தார். ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தல் கட்சி, பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்ததை அடுத்து அக்கட்சியின் எம்எல்ஏ அனில் குமார் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.