இடுக்கி:கேரளாவில் யானை தாக்கியதில், 70 வயது மூதாட்டி பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் சமீபகாலமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி ஊருக்குள் வருவதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம், இடுக்கி மாவட்டம் கஞ்சிரவேலி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்திரா ராமகிருஷ்ணன், 70, என்ற மூதாட்டி, அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள தன் கணவருக்கு காலை உணவு அளிக்க சென்றார்.
அப்போது, அவரை யானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த அவரை, அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
இதையடுத்து அப்பகுதி மக்களுடன் காங்கிரஸ் எம்.பி., டீன் குரியகோஸ் ஒன்றிணைந்து, யானைகள் தாக்கி,மனித உயிர்கள் பலியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாத மாநில அரசு மற்றும் வனத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வந்த போலீசாரை முற்றுகையிட்டு, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், வலுகட்டாயமாக மூதாட்டியின் உடலை எடுத்து செல்ல போலீசார் முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர்கள், பிரச்னைக்கு தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள், போராட்டத்தை கைவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement